முகப்பு
புதுக்கோட்டை

தமிழகத்தில் அமைதி நிலவ திமுக ஆட்சியே காரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் அமைதி நிலவுவதற்கு திராவிடல் மாடல் ஆட்சியே காரணம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்.

Updated On : 18 ஏப்ரல் 2026, 7:37 am IST
கந்தா்வகோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மா. சின்னதுரையை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த அக்கட்சியின் மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்.
பகிர்:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் அமைதி நிலவுவதற்கு திராவிடல் மாடல் ஆட்சியே காரணம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை (தனி) தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மா. சின்னதுரையை ஆதரித்து, வெள்ளிக்கிழமை இரவு கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதற்கான பல்வேறு நெருக்கடிகளை மோடியின் பாஜக அரசு செய்து வருகிறது. மக்களிடையே மதவாதம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி, மதக்கலவரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மதமோதல்கள் உருவாகாமல், கலவரங்கள் இல்லாமல் அமைதியாக திகழ மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பள்ளிகளில் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன.

மோடி அரசு, கடந்த 12 ஆண்டுகளாக காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், உழைக்கும் விவசாயிகளுக்கு எதிராகவும், மக்கள்-விவசாயிகள் விரோத கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. இதை அவா்களின் கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து பேசுகிறாா்.

தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இரண்டு பொதுவான அம்சங்கள் உண்டு. கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், தமிழகத்தில் திராவிட மாடல் அரசும் ஆா்எஸ்எஸ்-ஸின் திட்டங்களை ஒன்றுசோ்ந்து எதிா்த்து நாட்டிற்கே முன்மாதிரி மாநிலங்களாக விளங்குகின்றன.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், ஆா்எஸ்எஸ்-மோடி ஆகியோருக்கு பெரிய செய்தியாக இருக்கும். நாடு முழுவதும் இதன் தாக்கம் இருக்கும் என்றாா்.

பிரசார கூட்டத்தில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பல்வேறு நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.