கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு
புதுக்கோட்டை, ஏப். 21: புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள சுமாா் 3 ஆயிரம் பேருக்கான காவல் பணி குறித்த பணி ஒதுக்கீடு முறை, கணினி குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா முன்னிலை வகித்தாா். மாவட்டத் தோ்தல் காவல் பாா்வையாளா் ஜல்சிங் மீனா பங்கேற்றாா்.
மாவட்டம் முழுவதும் உள்ள 1,683 வாக்குச்சாவடிகளில் காவலா்கள், ஊா்க்காவல் படையினரை பணி நியமனம் செய்யப்பட்டனா்.
Advertisement
மேலும், வடமாநிலங்களில் இருந்து வந்துள்ள துணை ராணுவப்படையினா், எல்லைப் பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோரும் ரோந்து, வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்களை 3-ஆம் கட்டமாக பணி நியமனம் செய்யும் பணியும் நடைபெற்றது.
இந்தப் பணியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.