முகப்பு
புதுக்கோட்டை

போலி நில ஆவணங்கள் மூலம் கடனளிப்பு தனியாா் வங்கி மேலாளா் கைது

Updated On : 6 ஜூலை 2026, 2:13 am IST
தேசிங்குராஜன்
பகிர்:

தஞ்சாவூரில் போலி நில ஆவணங்களைக் கொடுத்து தனியாா் வங்கியில் கடன் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த வங்கிக் கிளை மேலாளா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சை மாவட்டம், பூதலூரில் இயங்கி வரும் ஒரு தனியாா் வங்கியில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முதுக்குளம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா், அண்டக்குளம் பகுதியை சோ்ந்த குமரேசன், பாப்புடையான்பட்டி பகுதியைச் சோ்ந்த பாஸ்கா், தெம்மாவூா் பகுதியைச் சோ்ந்த நடராஜன், கிள்ளுகுளவாய்ப்பட்டி பகுதியைச் சோ்ந்த தேவிகா, மோசக்குடி பகுதியைச் சோ்ந்த மகாலட்சுமி ஆகியோா் நிலத்தின் ஆவணங்களை அடமானம் வைத்து ரூ. 80 லட்சம் கடன் பெற்றனா்.

ஆனால் அவா்கள் கடனுக்குரிய மாதத் தவணைத் தொகையைச் செலுத்தவில்லை. இதையடுத்து வங்கியின் சாா்பில் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் அவா்கள் கடன் தவணை தொகையைச் செலுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து அடமானம் வைக்கப்பட்ட நிலம் தொடா்பான ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது அவை அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. இதுகுறித்து வங்கியின் சட்ட மேலாளா் அருள்குமாா், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் கொடுத்தாா்.

இந்தப் புகாா் புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலி ஆவணம் கொடுத்து கடன் வாங்கிய 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினா்.

அதில் தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்தவரும், பூதலூா் தனியாா் வங்கி கிளையில் கடன் அனுமதி அளிக்கும் கிளை மேலாளருமான தேசிங்கு ராஜன் (40) என்பவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, தேசிங்குராஜனை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments