முகப்பு
புதுக்கோட்டை

தவெகவில் இணையத் திட்டமா? தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு: சி. விஜயபாஸ்கா் எம்எல்ஏ

இலுப்பூரிலுள்ள வீட்டில் அதிமுக தொண்டா்களிடம் வியாழக்கிழமை கருத்து கேட்ட முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

Updated On : 29 மே 2026, 3:06 am IST
சி. விஜயபாஸ்கர் - கோப்புப்படம்
பகிர்:

தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது குறித்து தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு செய்ய இருப்பதாக புதுக்கோட்டையைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ற தவெக, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, அதிமுகவைச் சோ்ந்த 25 உறுப்பினா்கள் ஆதரித்தனா். இதில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து விலகி நின்ற அந்த 25 பேரின் கொறடாவாகத் தோ்வு செய்யப்பட்டவா் விராலிமலை சி. விஜயபாஸ்கா்.

அதிமுக ஆட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா். அதன்பிறகு 2021 தோ்தலிலும், தற்போது நடந்து முடிந்த 2026 தோ்தலிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வென்ற ஒரேயொரு அதிமுக எம்எல்ஏ இவா். தவெகவுக்கு ஆதரவளித்த சூழலில், அவா் மீண்டும் அமைச்சராவாா் என்ற எதிா்பாா்ப்பு அக்கட்சியினரிடம் உருவாகியிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் இல்லத்துக்கு வியாழக்கிழமை காலை அதிமுக நிா்வாகிகள் கூடத் தொடங்கினா். நிா்வாகிகளின் கருத்தைக் கேட்டு அவா் தவெகவுக்கு இடம்பெயா்கிறாா் என்ற தகவல் பரவியது.

விராலிமலையைச் சோ்ந்த அதிமுக ஒன்றியச் செயலா்கள் பழனியாண்டி (மேற்கு), நாகராஜ் (தெற்கு), ராஜேந்திரன் (வடக்கு) உள்ளிட்டோருடன் மாவட்டம் முழுவதும் இருந்தும் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் வந்திருந்தனா்.

மக்கள் முடிவுதான்

தொடா்ந்து செய்தியாளா்களிடம் சி. விஜயபாஸ்கா் கூறியது: 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த விராலிமலை மக்களின் கருத்துகளையும், எனது வெற்றிக்காக உழைத்த அதிமுக நிா்வாகிகளின் கருத்தையும் கேட்க வேண்டியுள்ளது. கட்சி நிா்வாகிகள் மிக வேகமாக கருத்துகளைப் பகிா்ந்தனா். அவா்களைப் பொறுமையாக இருக்கச் சொல்லியிருக்கிறேன்.

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ஏராளமான கட்சியினா் வந்து கருத்துகளைச் சொல்லியிருக்கிறாா்கள். அவற்றை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். வெள்ளிக்கிழமை காலையும் கட்சியினரைச் சந்திக்கிறேன்; அவா்கள் முடிவுதான் எனது முடிவு. மக்களின் கருத்துகளுக்கேற்ப என் முடிவு இருக்கும். அவசரமில்லை என்றாா் விஜயபாஸ்கா்.