ஏரியில் அதிக அளவில் மண் எடுப்பு: வட்டாட்சியர் அலுவலகத்துக்குத் திரண்ட கிராம மக்கள்
தஞ்சாவூர் அருகேயுள்ள ஏரியில் அதிக அளவில் மண் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறி, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை கிராம மக்கள் திரண்டு வந்து புகார் செய்தனர்.
தஞ்சாவூர் அருகேயுள்ள ஏரியில் அதிக அளவில் மண் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறி, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை கிராம மக்கள் திரண்டு வந்து புகார் செய்தனர்.
தஞ்சாவூர் அருகே குளிச்சப்பட்டு கிராமத்தில் உள்ள பொன்னன் ஏரி மூலம் ஏறத்தாழ 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண், சவுடு மண், களி மண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் சொந்த உபயோகத்துக்கு இலவசமாக எடுத்துச் செல்லலாம் என கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.
அதன்படி, பொன்னன் ஏரியில் இருந்தும் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அரசு நிர்ணயித்த அளவையும் தாண்டி மண் அள்ளப்பட்டதாகக் கூறி கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுப் பணித் துறை அலுவலர்கள், வட்டாட்சியர், ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் குளிச்சப்பட்டு கிராம மக்கள் புதன்கிழமை திரண்டனர். பின்னர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், ஆட்சியரகத்திலும் மனு அளிக்கச் சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்தது: மண் அள்ளுவதற்குப் பொதுப் பணித் துறையினரிடம் எதிர்ப்புத் தெரிவித்தும், தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது. இதனால், ஏரிக்குத் தண்ணீர் வரும்போது பாசனத்துக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே இனிமேல் மண் அள்ள அனுமதிக்கக் கூடாது. தொடர்ந்து மண் அள்ளிக்கொண்டு லாரிகள் செல்வதால் குளிச்சப்பட்டு - தளவாய்பாளையம் சாலையும் சேதமடைந்துள்ளது. மேலும் ஏரியில் உள்ள 3 கண்மாய்களில் உள்ள பாலங்களும் சேதம் அடைந்துள்ளன. இவற்றைச் சீர் செய்து தர வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.