தனியார் வங்கிக் கடன்களை அரசுத் தள்ளுபடி செய்து தர வலியுறுத்தல்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனியார் வங்கி, நுண் நிதி நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்து
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனியார் வங்கி, நுண் நிதி நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சி. பக்கிரிசாமி, பொருளாளர் ஏ. குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆர். ராமச்சந்திரன், டி.ஆர். குமரப்பா, ம. விஜயலட்சுமி, ஆர்.ஆர். முகில் உள்ளிட்டோர் தலைமையில் ஒரத்தநாடு அருகேயுள்ள சோழகன்குடிகாடு சோழன் மகளிர் சுய உதவிக் குழுவினர் அளித்த மனு:
புயல் பாதிப்புக் காரணமாக தென்னை உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். இந்நிலையில், தற்போது தனியார் வங்கிகளில் பெறப்பட்ட நுண் கடன்களை வசூல் செய்வதற்கு மிகவும் கெடுபிடி காட்டப்படுகிறது. பெண்கள் சுய உதவிக் குழு மூலம் பெறப்பட்ட கடன்களைத் திரும்பச் செலுத்த வழியில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெறப்பட்ட கடன்களுக்குத் தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகையை வரவு வைக்கின்றனர். எனவே, ஆட்சியர் தலையிட்டு தனியார் நுண் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிவாரணத் தொகையை ஏற்கெனவே பெறப்பட்ட கடன் தொகையில் வரவு வைப்பதைத் தவிர்க்கவும், அத்தொகையை அரசே தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
நிவாரணம் கோரி...: இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரத்தநாடு ஒன்றியச் செயலர் சீனி. முருகையன் அளித்த மனு:
கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து, உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மணல் திருட்டை தடுக்க...: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் உள்ளிட்டோர் அளித்த மனு: அம்மாபேட்டை ஒன்றியத்தில் வெண்ணாற்றின் பல இடங்களில் மணல் திருட்டால் கட்டாந்தரை போல் காட்சி அளிக்கிறது. நிலத்தடி நீரும் குறைந்துள்ளது. மணல் திருட்டை தடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
கணவரை மீட்க...: பட்டுக்கோட்டை வட்டம், பழைய முதல்சேரியைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மனைவி அனிதா அளித்த மனு:
எனது கணவர் ஆரோக்கியசாமி 5 ஆண்டுகளாக சவூதியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணிக்கு இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. மேற்கொண்டு எந்தத் தகவலும் வரவில்லை. எனவே, உடலை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.