நகை திருட்டு வழக்குகளில் மூவர் கைது: 89 பவுன் நகைகள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய மூவரை
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய மூவரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து 89 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாச்சியார்கோவில் கடைவீதியில் சனிக்கிழமை இரவு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் திருநரையூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (41), திருமலைராஜபுரம் மாதாகோயில் தெருவைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் ஜெயசீலன் (45), மேலவிசலூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் நீலகண்டன் (45) என்பதும், இவர்களுக்கு நாச்சியார்கோவில் அருகே சம்பத்தனார்குடி பகுதியில் 2017 அக்டோபர் மாதத்தில் வீடு புகுந்து 50 பவுன் திருடப்பட்ட வழக்கிலும், திருச்சேறை அருகே செண்பகக்கொல்லை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் திருடிய வழக்கிலும், மருதாநல்லூரில் நடைபெற்ற வழிப்பறியிலும் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதில் நாச்சியார்கோவில் காவல்நிலையத்தில் பழைய குற்றவாளிகள் பதிவேட்டில் ரமேஷ் பெயர் உள்ளது.இதையடுத்து நாச்சியார்கோவில் போலீஸார், அவர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கிவைத்திருந்த ரூ. 22 லட்சம் மதிப்பிலான 89 பவுன் நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, ரமேஷ், ஜெயசீலன், நீலகண்டன் ஆகிய மூவரையும் போலீஸார் சனிக்கிழமை இரவு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இவர்களை15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.