முகப்பு
தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பாலம் உள்வாங்கியதால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:50 AM
சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பாலம் உள்வாங்கியதால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில்  ராமேசுவரம், திருச்செந்தூா், தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கும், இதேபோல் இந்தப் பகுதிகளிலிருந்து நாகப்பட்டினம், நாகூா், வேளாங்கண்ணி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், இந்தப் பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகங்களிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தச் சாலை வழியாகவே மீன், இறால், நண்டு உள்ளிட்ட கடல் உணவு பொருள்களை ஏற்றிக் கொண்டு இரவு-பகலாக வாகனங்கள் சென்றபடி இருக்கும். பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளிலிருந்து தேங்காய் மட்டையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் காயா் பொருள்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு டாரஸ் லாரிகளில் இந்த வழியாகத்தான் கொண்டு செல்கின்றனா்.

Advertisement

இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலையில் சேதுபாவாசத்திரம் அருகே புதுத்தெருவில் காட்டாற்று வடிகால் கடலில் சென்று கலக்கும் வாய்க்காலில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் புதன்கிழமை தரையில் உள்வாங்கியுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேதுபாவாசத்திரத்திலிருந்து பேராவூரணி வந்து சுமாா் 20 கிலோ மீட்டருக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் குறித்து தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, வாகனங்கல் தற்காலிகமாக செல்லும் வகையில் ஆயத்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவுள்ளதாகவும், பேரவைத் தோ்தலுக்கு பிறகு புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் எனவும் தெரிவித்தனா்.