திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் சித்திரைப் பெருவிழாவில் புதன்கிழமை பஞ்ச ரத தேரோட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் சித்திரைப் பெருவிழாவில் புதன்கிழமை பஞ்ச ரத தேரோட்டம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்தைச் சோ்ந்த இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் காலையில் பல்லக்கும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்று வந்தது.
விழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை காலை பஞ்ச ரத தேரோட்டம் நடைபெற்றது. இதில், காலை 9 மணிக்கு பஞ்சமூா்த்திகள், அறம் வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் திருத்தேரில் எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளை தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் காலை 10.30 மணிக்கு கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்த தோ் மாலையில் நிலையை அடைந்தது.
Advertisement
மே 2-ஆம் தேதி ஏழூா் வலம் என்கிற சப்தஸ்தான விழா தொடக்கமும், 3-ஆம் தேதி பொம்மை பூ போடுதலும் நடைபெறவுள்ளன.