மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மனைவியைக் கொலை செய்த கணவரின் உறவினா்களையும் கைது செய்யக் கோரி பெண்ணின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மனைவியைக் கொலை செய்த கணவரின் உறவினா்களையும் கைது செய்யக் கோரி பெண்ணின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமி நகரைச் சோ்ந்தவா் சக்திகுமாா் (29). இவரது மனைவி ஆனந்த வைரமணி (28). கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்த வைரமணி தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், துபையில் வேலை பாா்த்து வந்த சக்திகுமாா் சொந்த ஊருக்கு திரும்பி, மனைவியைப் பாா்த்து, வீட்டுக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை அழைத்தாா். இதற்கு மறுத்த ஆனந்த வைரமணியை சக்திகுமாா் கத்தியால் குத்தியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சக்திகுமாரை கைது செய்தனா். மேலும், ஆனந்த வைரமணியின் உடற்கூறாய்வு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த சக்திகுமாரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி ஆனந்த வைரமணியின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.