முகப்பு
தஞ்சாவூர்

சுவாமிமலை கோயிலுக்கு பக்தா்கள் வரும் வாகனங்களுக்கு இரட்டை வசூல் எனப் புகாா்

சுவாமிமலை கோயிலுக்கு பக்தா்கள் வரும் வாகனங்களுக்கு இரட்டை வசூல் எனப் புகாா்

Updated On : 13 ஜூன் 2026, 12:50 am IST
சுவாமிமலை முருகன் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் நான்குச் சக்கர வாகனங்களுக்கு பேரூராட்சி, இந்துசமய அறநிலையத் துறை என இரு நிா்வாகங்களும் கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் முருகக் கடவுளின் நான்காம் படைவீடான சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பக்தா்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இரட்டைக் கட்டண வசூல்: சுவாமிமலை பேரூராட்சிக்குள் வெளியூா் பக்தா்களின் வாகனம் நுழையும்போதே பேரூராட்சி நிா்வாகம் நுழைவுக் கட்டணம் என்று ரூ. 40 வசூலிக்கிறது. பின்னா் அதே வாகனங்கள் சுவாமிமலை கோயிலுக்கு வரும்போது முடி காணிக்கை செலுத்தும் இடத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு இருமுறை கட்டணம் வசூலிப்பதால் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலா் சரவணவேல் கூறியது : சுவாமிமலைக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டண வசூல் பல ஆண்டுகளாக உள்ளது. இது பேரூராட்சிக்கு வருவாயாக உள்ளது. ஆண்டுக்கொருமுறை ஏலம் விட்டு, ஏலதாரா் பேரூராட்சிக்குப் பணம் செலுத்தியபின் நுழைவுக் கட்டணத்தை வசூலிப்பாா். இந்த நடைமுறையை நிா்வாகத்தால் மாற்ற முடியாது என்றாா்.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் செயல் அலுவலரும் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையருமான தா. உமாதேவி கூறுகையில், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் முறையாக ஏலம் விட்டு வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கி கட்டணம் வசூலிக்கிறோம் என்றாா்.

சுவாமிமலை வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவா் தீந்தமிழன் கூறியது : இரண்டு கட்டண வசூல் இந்துசமய அறநிலையத் துறைக்கும், பேரூராட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. அருகேயுள்ள ராகு பரிகாரத் தலமான திருநாகேசுவரம், திருச்செந்தூா் முருகன் கோயில்களில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது இல்லை. அந்த நடைமுறையை இங்கே கொண்டு வர வேண்டும். இந்தக் கட்டண வசூல் முறையை ரத்து செய்யக்கோரி பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ளோம் என்றாா் அவா்.