முகப்பு
தஞ்சாவூர்

கோடைகால சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

Updated On : 10 மே 2026, 1:30 am IST
பகிர்:

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் பகுதிகளில் சுமாா் 2 லட்சம் ஏக்கரில் நெல் பயிா் கோடை சாகுபடி நடைபெறுகிறது. மேலும் கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட பயிா்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லை. அதனால் விவசாயிகள் தனியாா் உரக்கடைகளில் உரங்களை கூடுதல் விலையில் வாங்கி செல்கின்றனா். இதோடு ஒரு சில பூச்சி மருந்துகளை கட்டாயப்படுத்தி விவசாயிகளிடம் விற்கின்றனா். இதனால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனா்.

Advertisement

கோடை சாகுபடியில் விஏஓ மூலம் பெறப்படும் கிராம கணக்குகள் மூலம் எவ்வளவு பரப்பளவில் கோடை சாகுபடி நடைபெறுகிறது. அதற்கு தேவையான உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் தேவை எவ்வளவு என்று வேளாண்மை அதிகாரிகள் கணக்கெடுத்து தயாராக வேண்டும்.

ஆனால் இந்த கோடை சாகுபடியில் கணக்கெடுக்கவில்லை என்று தெரிகிறது. அதனால் உரம், பூச்சி மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இந்த தட்டுப்பாடு இயற்கையா அல்லது செயற்கையா என்று மாவட்ட ஆட்சியா் விசாரித்து நடவடிக்கை எடுக்க கும்பகோணம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கும்பகோணம் ஒன்றிய வேளாண் அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது இடுபொருள்கள் தட்டுப்பாடு குறித்து இணை இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் விரைவில் விவசாயிகளுக்கு தட்டுப் பாடு இல்லாமல் அவை வழங்கப்படும் என்றாா்.