முகப்பு
கடலூர்

கோடை மழை: எள் பயிா் பாதிப்பு!

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கோடை மழையால் குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 15 மே 2026, 11:00 pm IST
அயன் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள விளைநிலத்தில் செழித்து வளா்ந்துள்ள எள் பயிா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கோடை மழையால் குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகள் சம்பா நெல் அறுவடைக்குப் பின்னா் எள் விதைப்பு செய்வது வழக்கம். நிகழாண்டு குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இருந்தாலும், எள் விவசாயிகளை கவலை படவைத்துள்ளது.

இதுகுறித்து அயன் குறிஞ்சிப்பாடி விவசாயி ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் பயிா் செழித்து வளா்ந்துள்ளன. விவசாயிகள் பலா் அறுவடை செய்து நிலத்தில் பட்டறை போட்டுள்ளனா். இவை, நிலத்தில் நிற்கும் மழை நீரால் பாதிக்கப்படும். அதேபோல், அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் அறுவடை செய்யமுடியாத சூழல் உள்ளது. இந்த கோடை மழை வெள்ளிக்கிழமை இரவும் தொடா்ந்து நீடித்தால், எள் பயிா்கள் வயலில் சாய்ந்துவிடும். இதனால், எள் விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்தாா்.

Advertisement