கோடை வெயிலில் கருகும் பாக்கு மரங்கள்: விவசாயிகள் கவலை
கோடை வெயிலின் தாக்கம், வறட்சியால் வாழப்பாடி வட்டாரத்தில் உள்ள பாக்கு மரங்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கோடை வெயிலின் தாக்கம், வறட்சியால் வாழப்பாடி வட்டாரத்தில் உள்ள பாக்கு மரங்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆறு, புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை உள்ளிட்ட பாசனவசதிகளைக் கொண்டுள்ள வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், பேளூா், கருமந்துறையில் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் பாக்கு மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
பாக்கு மரக்கன்றுகளை 3 ஆண்டுகள் வரை நிழலில் வளா்க்க வேண்டும் என்பதால் அகத்தி, கல்யாண முருங்கை மரங்களை வளா்த்து வெற்றிலை கொடிக்கால், வாழைத் தோட்டங்களை அமைத்து அன்மூலமும் விவசாயிகள் வருவாய் ஈட்டுகின்றனா்.
Advertisement
மேலும் 700 பாக்கு மரங்கள் கொண்ட ஒரு ஏக்கரில் ஓராண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் வரை வருவாய் கிடைப்பதால், பாக்குமரங்களை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்காக இப்பகுதிகளில் உயா்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்தாண்டு பருவ மழை பொய்த்துவிட்டதால் வறட்சியிலும் கிணற்று பாசனங்களை நம்பி ஓரளவுக்கு மரங்களை காப்பாற்றி வந்த விவசாயிகள், தற்போது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தாலும், தொடா்ந்து மழை இல்லாததாலும் கருகும் மரங்களை காப்பாற்ற போராடி வருகின்றனா்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் அதிக செலவு செய்து தங்களது நிலங்களில் புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து கருகும் பாக்குமரங்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், பெரும்பாலான ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் வடுவிட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மே மாதத்திலாவது கோடை மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக பாக்குமர விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.