சோமரசம்பேட்டையில் 6 கோயில்களின் சுவாமிகள் வீதியுலா
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டையில் 6 கோயில்களின்
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டையில் 6 கோயில்களின் சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திங்கள்கிழமை அருள்மிகு முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.மதியம் தீர்த்தவாரிக்கு பிறகு சுவாமி, கீழவயலூர்,வடகாபுத்தூர் மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதராக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தங்கச் சப்பரத்தில் சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர்.சிலை அருகில் வந்து சேர்ந்தார். அப்போது, உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள அருள்மிகு பாலாம்பிகை சமேத உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், பொம்மசமுத்திரம் காசிவிசுவநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், உறையூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆகிய சுவாமிகள் ஒன்றாக சந்தித்து முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிவனடியார்கள் பலரும் திருவாசகம் பாடியபடி சுவாமியுடன் வந்தனர்.பின்னர் சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டகப்படிக்கு வந்து தங்கினர். அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. அதன்பிறகு அனைத்து சுவாமிகளும் அந்தந்த கோயில்களுக்கு திரும்பிச் சென்றனர். வயலூர் சுப்பிரமணியசுவாமி அதவத்தூர் மண்டகப்படிக்கு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து வீதியுலா வந்து புதன்கிழமை அதிகாலை வயலூருக்கு சென்றார்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் கோயில் செயல் அலுவலர் சுரேஷ், கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.