திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இத் திருத்தலம் திருமணத் தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிப் பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றப்பட்டது.
அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாரதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள், அனைத்து கிராமபட்டைய தாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.