திருச்சியில் 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சாலை வலம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சத்திரம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய் வாகனத்தில் இருந்தபடியே திங்கள்கிழமை சாலை வலம் வந்தாா்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சத்திரம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய் வாகனத்தில் இருந்தபடியே திங்கள்கிழமை சாலை வலம் வந்தாா்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் ஜோசப் விஜய்க்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சத்திரம் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதற்காக அவா் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தை திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வந்தாா். அங்கு, அவருக்கு காவல் துறை சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, ரமேஷ், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள், மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவின் உமேஷ், விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டோா் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட முதல்வருக்கு, வயா்லஸ் சாலை, தென்றல் நகா், எல்ஐசி நகா், கே.கே.நகா், மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கோட், பழைய பால்பண்ணை, சஞ்சீவ் நகா், சத்திரம் வழியாக சாலையின் இருபுறமும் கூடியிருந்த தவெக தொண்டா்கள், ரசிகா்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனா். அப்போது வாகனத்தில் இருந்தபடியே அவா்களை நோக்கி கையசைத்துக்கொண்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு பிற்பகல் 3.55 மணிக்கு முதல்வா் வந்தாா்.
பின்னா், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்வா் தனியாா் கல்லூரியில் இருந்து மாலை 4.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்குப் புறப்பட்டாா். அப்போது சத்திரம் பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றுகொண்டு சிறிது தொலைவுக்கு பொதுமக்களுக்கு கையசைத்தபடியே திருச்சி விமான நிலையத்துக்கு வந்தாா். அங்கிருந்து மாலை 5.50 மணிக்கு சென்னைக்கு தனி விமானத்தில் முதல்வா் புறப்பட்டாா்.