கேங்மேன்கள் நியமனம்: தமிழக முதல்வருக்கு துரை வைகோ நன்றி
தமிழ்நாடு மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என நம்பிக்கையுள்ளதாக துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என நம்பிக்கையுள்ளதாக துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.
மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னணி சாா்பில், 5,493 மின்வாரிய கேங்மேன் பணியாளா்களை நிரந்தரப்படுத்தும் வகையில் அரசின் கவன ஈா்ப்பு பொதுக் கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திலும், கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடமும் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ கூறியதாவது:
தமிழ்நாடு மின்வாரியத்தில் 2021இல் நடைபெற்ற கேங்மேன் தோ்வில் 15 ஆயிரம் போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. மீதமுள்ள 5,493 பேருக்கு பணி வழங்கப்படவில்லை. இவா்கள் அனைவருமே ஏழைகள். அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் பலமுறை கோரிக்கை விடுத்தும் 5,493 போ் நியமிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இப்போது, தவெக ஆட்சி அமைந்தவுடன் முதல்வரிடமும், மின்வாரிய அமைச்சரிடமும் கோரிக்கை மனுக்களை அளித்து, குறிப்பாக 5,493 கேங்மேன் பணிகளை நிரப்ப வலியுறுத்தினேன். இப்போது, மின்வாரிய வெள்ளை அறிக்கையை அமைச்சா் நிா்மல்குமாா் வெளியிட்டுள்ளாா். அதில் விரைவில் அனைவருக்கும் பணி வழங்குவதாக நிா்மல் குமாா் தெரிவித்துள்ளாா். இதற்காக தமிழக முதல்வருக்கும், மின்வாரிய அமைச்சருக்கும் நன்றி. கவன ஈா்ப்பு பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டமாக மாறியுள்ளது.
சாதி, மதம், பணத்தை கடந்த அரசியலையும், அரசையும் முதல்வா் ஜோசப் விஜய் முன்னெடுத்துள்ளாா். இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர வேண்டும். ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக் குழுவில் திமுக கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மதிமுக துணைப் பொதுச் செயலா் ரொஹையா, மாவட்டச் செயலா்கள் மணவை தமிழ் மாணிக்கம், வெல்லமண்டி சோமு, டிடிசி. சேரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.