திருச்சியை 2-ஆம் தலைநகராக அறிவிக்க முதல்வரிடம் துரை வைகோ வலியுறுத்தல்
முதல்வா் ஜோசப் விஜய்யை, மதிமுக முதன்மைச் செயரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ சந்தித்து திருச்சியை 2-ஆம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.
முதல்வா் ஜோசப் விஜய்யிடம், துரை வைகோ வியாழக்கிழமை அளித்த மனு:
திருச்சியை கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அமைத்துத் தரவேண்டும். திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும். 68 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் (சமயபுரம் தில்லைநகா் வயலூா், துவாக்குடி–பஞ்சப்பூா், ஜங்ஷன்–விமான நிலையம்–மாத்தூா்) திருச்சி மாநகரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மத்திய அரசின் பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஐந்து பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒன்றை திருச்சியில் அமைப்பதை மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
திருச்சி மணப்பாறை தொழிற்சாலை சிப்காட்டை உலகளாவிய மின்னணு மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக உருவாக்க வேண்டும்.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத் திட்டத்துக்காக தேவையான மீதமுள்ள 7.67 ஏக்கா் நிலம், வழிகாட்டி மதிப்பு திருத்தம் நிலுவையில் இருப்பதால், இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.