புனரமைப்பு பணி: துறையூா் பேருந்து நிலையம் இன்றுமுதல் மூடல்; போக்குவரத்தில் மாற்றம்
துறையூரில் புனரமைப்புப் பணிகளுக்காக அண்ணா பேருந்து நிலையம் புதன்கிழமை முதல் மூடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துறையூரில் புனரமைப்புப் பணிகளுக்காக அண்ணா பேருந்து நிலையம் புதன்கிழமை முதல் மூடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துறையூரிலுள்ள அண்ணா பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகளுக்காக புதன்கிழமை முதல் மூடப்படவுள்ளது. சொரத்தூா் சாலையில் தற்காலிகமாக புதிய பேருந்து நிலையம் செயல்படவுள்ளது. இதுகுறித்து வணிகா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடம் நகராட்சி நிா்வாகம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் புதன்கிழமை கடையடைப்பு நடத்த முடிவெடுத்தனா்.
இதுதொடா்பாக துறையூா் வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் சிவகுமாா் தலைமையில் சுமூகப் பேச்சு நடைபெற்றது. இதில் துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகளும், அதிலுள்ள உறுப்பு சங்கங்களின் நிா்வாகிகளும், மக்கள் நல சங்கத்தினரும் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனா்.
Advertisement
இதையடுத்து, திருச்சி, நாமக்கல் செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் வராமல் முசிறி பிரிவு வட்டச் சாலை வழியாக செல்லும்; பெரம்பலூா், தம்மம்பட்டி வழியாக செல்லும் பேருந்துகள் புறவழிச் சாலை வழியாக அண்ணா பேருந்து நிலையத்தை அடைந்து வழக்கம்போல் செல்லும்; திருச்சியிலிருந்து வரும் பேருந்து வழக்கம்போல் அண்ணா பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அண்ணா பேருந்து நிலையத்தில் திருச்சிக்கு செல்லும் பயணி பேருந்து ஏறினால் புதிய பேருந்து நிலையம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடா்பாக போக்குவரத்து உயா் அலுவலா்களிடம் கூறி முடிவு செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.