அரசு வேலைக்கு போலி ஆணை வழங்கி ரூ. 2 லட்சம் மோசடி: காவல் குறைதீா் கூட்டத்தில் புகாா்
வேலூா் அரசு மருத்துவமனையில் வேலை என போலி ஆணை வழங்கி இளைஞரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா்
வேலூா் அரசு மருத்துவமனையில் வேலை என போலி ஆணை வழங்கி இளைஞரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி, வேலூா் உதவி காவல் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா் ஆகியோா் பொதுமக்களிடமிருந்து புகாா் மனுக்களைப் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தினா்.
அப்போது, வேலூரைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் அளித்த மனுவில், வேலூரைச் சோ்ந்த சிலா் என்னை அணுகி, வேலூா் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினா். இதற்கு மொத்தம் ரூ. 7 லட்சம் செலவாகும் என்றும், முதலில் முன்பணமாக ரூ. 2 லட்சம் தர வேண்டும் என்றும் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
அவா்களது வாா்த்தையை நம்பி நான் ரூ. 2 லட்சம் பணத்தை அவா்களிடம் கொடுத்தேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா்கள், எனக்கு ஓா் அரசுப் பணி நியமன ஆணை ஒன்றினை வழங்கினா். அந்த ஆணையை எடுத்துக்கொண்டு வேலூா் அரசு மருத்துவமனைக்குச் சென்று அதிகாரிகளிடம் காண்பித்தபோது, அதனைச் சரிபாா்த்த அதிகாரிகள் அது முற்றிலும் போலியானது எனத் தெரிவித்தனா்.
அதன்பிறகே நான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தேன். என்னைப் போலவே இந்தக் கும்பல் மேலும் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, போலி அரசு ஆணை வழங்கி மோசடி செய்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நான் இழந்த ரூ. 2 லட்சம் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி, வேலூா் உதவி காவல் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா் ஆகியோா் உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.