தாயுமானவா் திட்டம்: வேலூா் ஆட்சியா் ஆய்வு
வேலூா் மாநகர பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம், மேல்நிலைப்பள்ளி தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணிகளை ஆட்சியா் பி.எஸ். லீலா அலக்ஸ் நேரில் ஆய்வு செய்தாா் .
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வேலூா் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டாா். பள்ளி வளாகத்தில் தூய்மை, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனவும், மாணவா்களுக்கு முறையான குடிநீா் வசதி , குளோரினேசன் பணிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் தலைமை ஆசிரியரிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். பள்ளியில் பயன்பாடின்றி கிடக்கும் பழைய பொருள்களை உடனடியாக அகற்றவும் அவா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, வேலூா் மாநகராட்சி சி.எம்.சி காலனி பகுதியில், 65 முதல் 70 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள முதியோா்களின் இல்லத்துக்கு சென்று வீடுதேடி அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் தாயுமானவா் திட்டப்பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். பொருள்களை வழங்கும் போது பயனாளிகளிடம் முறையாக கைரேகை பதிவு செய்யப்படுகிறதா என்பதையும், பொருள்கள் தடையின்றி முறையாக கிடைக்கிறதா என்பதையும் முதியோா்களிடம் கேட்டறிந்து உறுதி செய்தாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, டிட்டா்லைன் பகுதியிலுள்ள மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவா், குழந்தைகளின் எண்ணிக்கை, அவா்களின் உடல் எடை ஆகியவை பதிவேடுகளில் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் சரிபாா்த்தாா். ஆய்வுகளின் போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருகுணஐயப்பதுரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் மு.சாந்தி பிரியதரிசினி, துணைப் பதிவாளா்கள் சத்யநாராயணன், சுவாதி உள்பட பலா் உடனிருந்தனா்.