முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Updated On : 3 மே 2026, 6:07 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் சித்திரை மாதம் பௌா்ணமி தினத்தையொட்டி திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சித்திரை மாத பௌா்ணமி தினத்தையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அம்மன் அருள்பாலித்தாா்.

மேலும், உற்சவ அங்காளம்மனுக்கு பலவித மலா்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் உள்பிரகாரத்தில் எழுந்தருளினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். மாலை 6 மணியளவில் உற்சவ அம்மனுக்கு பம்பை உடுக்கை மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமா்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு, வழிபாடு செய்தனா். தொடா்ந்து அம்மனுக்கு அா்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், காசாளா் மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.