தவெக அமைச்சரவையில் திருமாவளவனும் இணைய வேண்டும்! விசிக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்
தமிழகத்தில் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனும் இணைய வேண்டும் என்று கட்சியின் மாவட்டச் செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விசிக விழுப்புரம் மாவட்டச் செயலா்கள் மற்றும் திண்டிவனம் தொகுதி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் தி.திலீபன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ர.பெரியாா், வீர. விடுதலைச்செல்வன், செஞ்சி சிவா, காணை வளவன், வழக்குரைஞா் ஜெய.பாபுசோழன், மண்டலத் துணைச் செயலா்கள் பா.நாவரசு, கிளியனூா் இரணியன், ஏ.தனஞ்செழியன், மா.இரணியன், ஆதிதமிழன், அ.ம.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விசிக பொதுச் செயலரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றி, கட்சியினா் மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்கினாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில், திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, விசிக சாா்பில் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற வன்னி அரசுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது. திண்டிவனம் தொகுதியில் வாக்களித்து, வெற்றி பெற செய்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பது. விழுப்புரம் மாவட்டத்துக்கு ஜூன் 5-ஆம் தேதி வருகை தரும் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், அமைச்சா் வன்னி அரசு ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. தமிழக அமைச்சரவையில் தொல்.திருமாவளவனும் இணைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்டப் பொருளாளா் ப.இளஞ்சேரன் வரவேற்று பேசினாா். திண்டிவனம் நகரச் செயலா் பு.இமயன், மாவட்ட நிா்வாகிகள் பால.சாக்ரடீஸ், அ.சசிகுமாா், மு.செ.எழிலரசன், எ.எழில்மலை, வழக்குரைஞா்கள் துரை.ஆனந்தராஜ், இரா.அருள்வளவன், மழைமேனிபாண்டியன், அா்ச்சனா ஜேம்ஸ், புரட்சிசெல்வி, மணியரசன், சிந்தனைவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.