முகப்பு
கடலூர்

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே சுகாதாரக் கேடு: நோய் பரவும் அபாயம் 

பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுவதால் தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:37 am IST
பகிர்:

பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுவதால் தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 பண்ருட்டி நகரில் உள்ள 33 வார்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக நகராட்சி நிர்வாகம் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளது. இதில், பண்ருட்டி பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது.
 நேதாஜி நகரில் உள்ள ஆழ்துளைக் கிணறிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர், இந்தத் தொட்டியில் ஏற்றப்பட்டு பின்னர் காமராஜ் நகர், அன்வர்ஷா நகர், லட்சுமிபதி நகர், லிங்க் ரோடு, அன்னை இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
 ஆனால், சமூக விரோதிகள் சிலர், சுமார் 60 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நகர நிர்வாகம் பல லட்சம் ரூபாய் செலவில் மேல்நிலை தண்ணீர் தொட்டி வளாகத்தைச் சுற்றிலும் சுவர் அமைத்தது. ஆனால், அதற்கு இதுவரை கேட் அமைக்கப்படவில்லை (படம்). பாதுகாவலரையும் நியமிக்கவில்லை.
 இதனால், குடிநீர்த் தொட்டி வளாகப் பகுதியில் சிலர் இயற்கை உபாதை கழிப்பதால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரில் அசுத்தம் கலந்து தொற்றுநோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே, நகர நிர்வாகம் குடிநீர்த் தொட்டி வளாக சுற்றுச் சுவருக்கு கேட் அமைத்து, உரிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.