மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே ஊழல் பெருகக் காரணம்: மாவட்ட எஸ்பி
மக்களிடம் ஊழல் ஒழிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே ஊழல் பெருக முக்கியக் காரணம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறினார்.
மக்களிடம் ஊழல் ஒழிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே ஊழல் பெருக முக்கியக் காரணம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறினார்.
ஊழல் ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, மத்திய அரசு நிறுவனங்களில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 67 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழா நெய்வேலியில் உள்ள கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
என்எல்சி இந்தியா நிறுவன மின் துறை இயக்குநர் வி.தங்கப்பாண்டியன் தலைமை வகித்துப் பேசினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பேசியதாவது: சமூக ஏற்றத் தாழ்வுகள், பேராசை, பல்வேறு அரசியல் காரணங்களால் ஊழல் உருவாகிறது என்றாலும், மக்களிடம் ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லாததே ஊழல் பெருக முக்கியக் காரணம் என்றார்.
கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி டி.வெங்கடசுப்ரமணியன் ஒருவார காலம் நடைபெற்ற நிகழ்ச்சிகளை காணொலிக் காட்சி மூலம் விளக்கிக் கூறினார். மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் என்.எம்.ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
என்எல்சியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்திய பல்வேறு நிறுவன பிரதிநிதிகளை என்எல்சி இயக்குநர்கள் கெüரவித்தனர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. என்எல்சி ஊழல் ஒழிப்புத் துறையின் வளாக இதழான "கண்காணிக்கும் கண்கள்' என்ற இதழை மாவட்ட எஸ்பி ப.சரவணன் வெளியிட முதல் பிரதியை மின்துறை இயக்குநர் வி.தங்கப்பாண்டியன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, என்எல்சி ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள் குறித்த கையேட்டை வி.தங்கபாண்டியன் வெளியிட்டார்.
மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் என்எல்சி இந்தியா அலுவலகங்களில் காகிதம் இல்லாத தகவல் தொடர்பை ஏற்படுத்தும் "இ-ஆபிஸ்' என்ற இணைய தள வசதியை தொடக்கி வைத்தார். மேலும், ஊழியர்கள் தங்களது குறைகளை இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் வசதி, ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை செல்லிடப்பேசி மூலம் தெரிந்துகொள்ளும் செயலி ஆகியவற்றையும் தொடக்கி வைத்தார். கண்காணிப்புத் துறையின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை விளக்கும் மின்னணு வடிவ ஆண்டறிக்கையை திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் என்.என்.எம்.ராவ் வெளியிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.