வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியர்
விருத்தாசலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
விருத்தாசலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழக கிடங்கில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களின் தன்மையை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வன் சனிக்கிழமை மாலையில் விருத்தாசலம் வந்தார். அங்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அறையின் சீலினை அகற்றி விட்டு இயந்திரங்களைப் பார்வையிட்டார்.
பின்னர், மீண்டும் அந்த அறை சீல் வைக்கப்பட்டது.
அப்போது ஆட்சியர் கூறியதாவது: 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு முடிவடைந்துள்ளது.
இதில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் 5,710, கட்டுப்பாட்டு கருவிகள் 3,100, வாக்கு பதிவை உறுதிசெய்யும் இயந்திரங்கள் 3,100 ஆகியவை பரிசோதனை
செய்யப்பட்டு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.
ஆய்வில், விருத்தாசலம் கோட்டாட்சியர் ச.சந்தோஷினி சந்திரா, தேர்தல் வட்டாட்சியர் ப.பாலமுருகன், விருத்தாசலம் வட்டாட்சியர் ஆர்.ஸ்ரீதரன், விருத்தாசலம் தேர்தல் துணை வட்டாட்சியர் அன்புராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிபிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.