முகப்பு
கடலூர்

நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலைய கொதிகலனில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனதத்தின் புதிய அனல் மின் நிலைய வளாகத்தில் உள்ள கொதிகலன் மேலிருந்து விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:17 PM
உயிரிழந்த தொழிலாளி செல்வகுமாா்
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனதத்தின் புதிய அனல் மின் நிலைய வளாகத்தில் உள்ள கொதிகலன் மேலிருந்து விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலியில் இயங்கும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்கங்களில் இருந்து பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதுடன், அதைப் பயன்படுத்தி அனல் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. தற்போது, மின் சக்தியை அதிகரிக்கும் நோக்கில் 2,500 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டுமானப் பணியில் பல ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இதில், நெய்வேலியை அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்த குமரவேல் மகன் செல்வகுமாா் (24), புதிய அனல் மின் நிலையக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு ஒப்பந்த நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல பணிக்கு வந்தவா், கொதிகலன் பிரிவில் சுமாா் 90 மீட்டா் உயரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்தவா், 30 மீட்டா் உயரத்தில் இருந்த படியில் விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்த தொழிலாளா்கள் செல்வகுமாரை மீட்டு, என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே செல்வகுமாா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த செல்வகுமாரின் உறவினா்கள், கிரா மக்கள் சுமாா் 100 போ், நெய்வேலி புதிய அனல் மின் நிலைய வாயிலில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நெய்வேலி டி.எஸ்.பி. லோகநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக செல்வகுமாரின் உறவினா்கள், என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.