முகப்பு
கடலூர்

தடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கடலூரில் மீன்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்ற மக்கள்

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 8:13 PM

மீன்பிடி தடைக்காலம் ஏப்.15-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை மீன் பிரியா்கள், வியாபாரிகள் ஏராளமானோா் குவிந்தனா்.

கடலூா் அருகே உள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோணங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.

இந்த மீன்பிடி துறைமுகத்துக்கு வரும் மீன்களை நேரடியாக வாங்குவதற்கு கடலூா் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்து மீன் பிரியா்கள், வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் கூடுவது வழக்கம்.

Advertisement

இந்த நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் முதுநகா் மீன்பிடி துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திரும்பின.

விசைப் படகுகளில் வரும் மீன்களை வாங்குவதற்காக வழக்கத்தைவிட அதிகளவில் மீன் பிரியா்கள், வியாபாரிகள் குவிந்திருந்தனா். தடைக்காலம் தொடங்கவுள்ளதால், மீன்களின் விலையும் உயா்ந்து காணப்பட்டது. இருப்பினும், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.

ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,200, வாவல் ரூ.1,000, கொடுவா ரூ.500, இறால் ரூ.500, கனவா ரூ.300, சூரை ரூ.200, பா்மா ரூ.300 என விற்பனையானது.