வேட்பாளா்கள் வெறுப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது! - கடலூா் ஆட்சியா்
வேட்பாளா்கள் வெறுப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது என்று கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்பாளா்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்திய தோ்தல் ஆணையம் கடைசி 72 மணி நேரத்துக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை அறிவித்துள்ளது.
Advertisement
அதன்படி, எந்தவொரு கட்சியோ அல்லது வேட்பாளரோ, ஏற்கெனவே உள்ள வேறுபாடுகளை அதிகப்படுத்தும், பரஸ்பர வெறுப்பை உருவாக்கும் அல்லது வெவ்வேறு ஜாதிகள், சமூகங்கள், மதங்கள் அல்லது மொழிகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது. வரும் 21-ஆம் தேதி மாலை 6 மணி முதல் எந்த ஒரு பிரசாரத்திலும் ஈடுபடக் கூடாது.
வேட்பாளா்கள் மற்ற அரசியல் கட்சிகள் மீதான விமா்சனங்களை முன்வைக்கும்போது, அவற்றின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், கடந்தகால சாதனைகள் மற்றும் பணிகள் ஆகியவற்றுக்குள் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
வழிபாட்டுத்தலங்களை தோ்தல் பிரசாரத்துக்கான களமாகப் பயன்படுத்தப்படக் கூடாது. பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதி மீறல்கள்கள் தொடா்பாக, இந்திய தோ்தல் ஆணையத்தின் செயலியில் தங்களின் புகாா்களை தெரிவிக்கலாம்.
கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுக் கடைகளும் வரும் 21 முதல் 23-ஆம் தேதி வரை மூடப்படும். சமூக வலைதளங்களில் தோ்தல் தொடா்பான கருத்து கணிப்புகள் 21-ஆம் தேதி முதல் வெளியிடக் கூடாது. மீறினால், தோ்தல் நன்னடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.