முகப்பு
கடலூர்

சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு மே 9-இல் மகாபிஷேகம்

சிதம்பரம் கோயிலில் ஸ்ரீநடராஜருக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வரும் மே 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 26 ஏப்ரல் 2026, 1:11 am IST
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் பொற்கூரை.
பகிர்:

சிதம்பரம் கோயிலில் ஸ்ரீநடராஜருக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வரும் மே 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், மகாருத்ர யாகமும், வைபவமும் நடைபெறவுள்ளன.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சித்சபையில் மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மாா்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

Advertisement

Advertisement

அதன்படி, சித்திரை மாத மகாபிஷேகத்தையொட்டி, வரும் மே 6-ஆம் தேதி காலை தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமமும், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜமூா்த்தி சந்நிதியில் நாந்தி, அனுக்ஜை பூஜையும் நடைபெறவுள்ளன. மே 7-ஆம் தேதி முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனையும், 8-ஆம் தேதி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம், தேவசபை முன்பு அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், ஆச்சாரிய வா்ணம், தன பூஜை, மகா தீபாராதனை நடைபெறவுள்ளன.

மே 9-ஆம் தேதி காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஏககால லட்சாா்ச்சனையும், அதன் பிறகு யாகசாலையில் கடஸ்தாபனமும், மகாருத்ர ஜப பாராயணமும் தொடங்கி நடைபெறுகின்றன. பிற்பகல் மகாருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகாருத்ர பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெறுகின்றன.

மாலை வடுக, கன்யா, சுவாசினி, தம்பதி, கோ, அஸ்வ, கஜ பூஜைகள், மகா பூா்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும் நடைபெற்று சித்சபை முன் உள்ள கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணை செயலா் ஏ.கணபதி சுப்பிரமணிய தீட்சிதா் மற்றும் கட்டளை தீட்சிதா் க.தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments