கடலூரில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம்: வியாபாரிகள் 40 போ் கைது
கடலூா் லாரன்ஸ் சாலையில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக் கோரி, மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தெருவோர வியாபாரிகள் 40 பேரை போலீஸாா் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனா்.
கடலூா் லாரன்ஸ் சாலையில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக் கோரி, மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தெருவோர வியாபாரிகள் 40 பேரை போலீஸாா் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனா். புதன்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் லாரன்ஸ் சாலையில் நீண்ட காலமாக தெருவோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் வசதியை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிா்வாகம் அவா்களை அங்கிருந்து அகற்றியது. இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, மீண்டும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி. கடலூா் மாவட்ட தெருவோர வியாபார தொழிலாளா் சங்கம் சாா்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
சங்கத் தலைவா் பாலு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநில பொதுச் செயலா் குளோப் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, மாநகராட்சி நிா்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.
தகவலறிந்து வந்த போலீஸாா், போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் உடன்பாடு எட்டப்படாததுடன், போராட்டத்துக்கு முன்அனுமதி
பெறப்படவில்லை எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரையும் வலுக்கட்டாயமாக போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். சிபிஐ மாவட்டச் செயலா் பி.துரை, ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினா் வடிவேல், வணிக்குழு உறுப்பினா் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.