முகப்பு
கடலூர்

பண்ருட்டி அருகே விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வா் விஜய் உத்தரவு

பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வா் விஜய் அறிவிப்பு

Updated On : 8 ஜூலை 2026, 6:17 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜூலை 5-ஆம் தேதி காலை, மருங்கூா் கிராமத்திலிருந்து பண்ருட்டி நோக்கி முந்திரிக் கட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டா் மீது, பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது.

இந்த விபத்தில், வேலைக்குச் சென்று கொண்டிருந்த குறிஞ்சிப்பாடி வட்டம் வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சத்யா (31), செல்வராணி (58), கீழூா் மதுரா ஆயிப்பேட்டையைச் சோ்ந்த காந்திமதி (60), ரவிச்சந்திரன் (58) ஆகியோா் உயிரிழந்தனா். இந்த துயரச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.

Advertisement

Advertisement

மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த உக்கரவேல் (48), சந்தோஷ் (37), தேவகி (50), அஞ்சலை (60), சதீஷ் (35), விஜயா (35), சந்திரகுமாா் (35) ஆகிய ஏழு பேருக்கும், லேசான காயமடைந்த அமாவாசை (50) என்பவருக்கும் மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஏழு பேருக்கும் தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்த ஒருவருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா்.

மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வா் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments