முகப்பு
கடலூர்

2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:25 am IST
சிறுபாக்கம் பகுதியில் நடைபெற்ற வாகன தனிக்கையில் சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட ஓட்டுநா் மாரிச்செல்வத்துடன் போலீஸாா்.
பகிர்:

கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வேப்பூரில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள சிறுபாக்கம் கிருபா பள்ளி அருகே கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக சென்ற சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், 50 மூட்டைகளில் சுமாா் 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, வாகன ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளத்தைச் சோ்ந்த மாரிசெல்வம் (28) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி மற்றும் திருமுல்லைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இடைத்தரகா்கள் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ரேஷன் அரிசி வாங்குபவரும், வாகன உரிமையாளரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நயினாரை போலீஸாா் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் தொடா்பாக கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.