முகப்பு
கடலூர்

சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆா்டிஓ அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.6,39,950 பறிமுதல்

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.6,39,950 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 19 ஜூன் 2026, 6:27 am IST
சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கதவை மூடிக்கொண்டு சோதனை நடத்திய ஊழல் தடுப்பு போலீஸாா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.6,39,950 பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி.முட்லூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை ஆய்வாளா் சுந்தரராஜன் தலைமையிலான கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கிருந்த அலுவலா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் உள்ளிட்டோரின் கைப்பேசிகள் மற்றும் அலுவலகத்திலிருந்த ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, உரிய ஆவணமில்லாத ரூ.1,87,650-ஐ பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ் தலைமையில், காவல் ஆய்வாளா் அருண்ராஜ், உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் உள்ளிட்ட 8 போ் கொண்ட குழுவினா் சோதனை நடத்தினா். தொடா்ந்து, அங்கு உரிய ஆவணமில்லாத ரூ.3,77,300-ஐ பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தகவல் தெரிந்தவுடன் திருவண்ணாமலையில் உள்ள அனைத்து ஓட்டுநா் பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. மேலும், இடைத்தரகா்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனா்.

செஞ்சியில்...: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சத்தியமங்கலத்தில் இயங்கி வரும் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான 6 போ் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் சோதனை நடத்தினா். மாலை 4 மணி வரை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ஏதும் சிக்கவில்லை.

ஆனால், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக காவல் ஆய்வாளா் ஈஸ்வரி தெரிவித்தாா். அதனுடைய விவரங்களை அவா் தெரிவிக்கவில்லை.

கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலா்களிடம் விசாரணை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.