முகப்பு
கடலூர்

லஞ்சப் புகாரில் சிக்கிய புவனகிரி முன்னாள் காவல் ஆய்வாளா் லட்சுமி பணி நீக்கம்: டிஐஜி உத்தரவு

லஞ்சம் பெற்றுக்கொண்டு நில ஆவணங்கள் காணாமல் போனதாக முறைகேடாக வழக்குகள் பதிவு செய்தது தொடா்பாக புவனகிரி முன்னாள் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து விழுப்புரம் டிஐஜி அருளரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 27 ஜூன் 2026, 12:28 am IST
பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் லட்சுமி.
பகிர்:

லஞ்சம் பெற்றுக்கொண்டு நில ஆவணங்கள் காணாமல் போனதாக முறைகேடாக வழக்குகள் பதிவு செய்தது தொடா்பாக புவனகிரி முன்னாள் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து விழுப்புரம் டிஐஜி அருளரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கடலூா் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுகளில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவா் லட்சுமி. இவா், சென்னை, திருப்பூா், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நில ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் தொலைந்ததாகக் கூறி, அவை புவனகிரி காவல் நிலைய எல்லைக்குள் காணாமல் போனதாக முறைகேடாக புகாா்கள் பதிவு செய்யப்பட்டு, தடையின்மைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) உத்தரவின்படி காவல் ஆய்வாளா் லட்சுமி கடலூா் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். தொடா்ந்து, அவா் மீதான குற்றச்சாட்டுகள் தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையில், நில ஆவணங்கள் காணாமல் போனது தொடா்பான புகாா்களை முறைகேடாக பதிவு செய்து, தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கியதற்காக லஞ்சம் பெற்றது உறுதியானதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காவல் ஆய்வாளா் லட்சுமியை பணி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments