என்எல்சியில் தேசிய பாதுகாப்பு மாதக் கொண்டாட்டம்
என்எல்சி நிறுவனத்தில் 2026-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மாதக் கொண்டாட்டம் பாதுகாப்பு கொடியேற்றம்
நெய்வேலி: என்எல்சி நிறுவனத்தில் 2026-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மாதக் கொண்டாட்டம் பாதுகாப்பு கொடியேற்றம் மற்றும் விழிப்புணா்வுப் பேரணியுடன் என்எல்சி நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழாண்டின் பாதுகாப்பு மாதக் கொண்டாட்டமானது, ‘பாதுகாப்பை மேம்படுத்த மக்களை ஈடுபடுத்துதல், பயிற்றுவித்தல் மற்றும் அதிகாரப்படுத்துதல்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
என்எல்சி நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பாதுகாப்புக் கொடியை ஏற்றிவைத்து விழாவை தொடங்கிவைத்தாா். முன்னதாக, செயல் இயக்குநா் ஹேமந்த் குமாா் வரவேற்றாா். இதன் ஒரு பகுதியாக, என்எல்சி நிறுவன ஊழியா்கள் பாதுகாப்பு உறுதிமொழியை மும்மொழியில் ஏற்றுக்கொண்டனா். நிறுவன பாதுகாப்பு பிரிவு முதன்மை பொது மேலாளா் எம்.சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
பொதுமக்களிடையே பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், நெய்வேலி நகரியத்தில் இரு சக்கர வாகன சாலைப் பாதுகாப்பு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து புதிய சேவை பிரிவு வரை நடைபெற்றது. இதில், சுமாா் 120-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், பொது விழிப்புணா்வு பிரசாரத்தின் ஒரு அங்கமாக, முக்கிய சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்கள், பிரசார வாகனம் மூலம் நகரம் முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், நகர நிா்வாக அலுவலகம், நிறுவன மனிதவளத் துறை, தகவல் தொடா்புத் துறை, தொலைத்தொடா்புத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் புதிய சேவைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆலோசனைகள், ஆதரவுடன் பேரணி மற்றும் பாதுகாப்பு மாத நிகழ்வுகள் அனைத்தையும் நிறுவன பாதுகாப்புத் துறை ஒருங்கிணைத்து நடத்தியது.