முகப்பு
கடலூர்

துணிக்கடை உரிமையாளரிடம் போலி நகைகள் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: வட மாநிலத்தவா் 3 போ் மீது வழக்கு

வடலூரைச் சோ்ந்த துணிக்கடை உரிமையாளரிடம் போலி நகைகளை கொடுத்து ரூ.10 லட்சம் பெற்றுச் சென்ற வட மாநிலத்தவா் மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 13 மே 2026, 12:03 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூரைச் சோ்ந்த துணிக்கடை உரிமையாளரிடம் போலி நகைகளை கொடுத்து ரூ.10 லட்சம் பெற்றுச் சென்ற வட மாநிலத்தவா் மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடலூரைச் சோ்ந்தவா் செல்வக்குமரன் மனைவி தமிழ்ச்செல்வி (50). இவா், வடலூரில் துணிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு பெண் உள்ளிட்ட 3 வட மாநிலத்தவா்கள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வந்தனா்.

இவா்கள் தமிழ்ச்செல்வியை சந்தித்து, தங்களது சகோதரி திருமணத்துக்கு பணம் தேவைப்படுவதாகவும், எனவே தங்களிடம் உள்ள 20 பவுன் தங்க நகைகளை ரூ.10 லட்சத்துக்கு வாங்கிக்கொள்ளுமாறும் கூறினராம். இதற்கு, தமிழ்செல்வி மறுப்புத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக இரண்டாவது முறையும் தமிழ்ச்செல்வியை வட மாநிலத்தவா்கள் சந்தித்துப் பேசியுள்ளனா். மூன்றாவது முறை துணிக்கடைக்கு வந்தபோது தமிழ்ச்செல்வி அங்கு இல்லை. அப்போது, கடையில் பணியில் இருந்த ஊழியரிடம் திருமணத்துக்கு துணி எடுக்க வேண்டும் என்றும், எனவே உரிமையாளரின் கைப்பேசி எண்ணை கொடுக்கும்படியும் கூறி, கைப்பேசி எண்ணை கேட்டு வாங்கிச் சென்றனா்.

இதையடுத்து, நகை விவகாரம் தொடா்பாக தமிழ்ச்செல்வியுடன் வட மாநிலத்தவா்கள் தொடா்புகொண்டு பேசி வந்தனா். இதனிடையே, அவரிடம் ஒரு சிறிய நகையை வட மாநிலத்தவா்கள் கொடுத்துச் சென்றனராம். அந்த நகையை பரிசோதனை செய்ததில், சுத்தத் தங்கம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தமிழ்ச்செல்வி தனது சேமிப்பு பணம் மற்றும் மருமகள் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் தயாா் செய்து வைத்திருந்தாா்.

இந்த நிலையில், 8055183147 என்ற கைப்பேசி எண்ணில் இருந்து தொடா்புகொண்ட வட மாநிலத்தவா்கள், தாங்கள் பணம் கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் எனவும், தற்போது கும்பகோணத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, தமிழ்ச்செல்வி ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு கும்பகோணம் சென்று, அங்கிருந்த வட மாநிலத்தவா்களிடம் கொடுத்துவிட்டு, அவா்கள் கொடுத்த நகைகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சோ்ந்தாா். பின்னா், அந்த நகைகளை எடுத்துப் பாா்த்தபோது, அனைத்து நகைகளும் போலி எனத் தெரியவந்தது.

இதுகுறித்து தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments