விழுப்புரத்தைச் சேர்ந்தவரின் லாரி திருட்டு: 3 பேர் கைது
விழுப்புரத்தைச் சேர்ந்தவரின் லாரியை திருடியதாக புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவரின் லாரியை திருடியதாக புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் நல்லரசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (36). சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் கடந்த 20-ஆம் தேதி புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு டைல்ஸ் கடைக்கு லாரியில் சரக்கு ஏற்றி வந்தார். சரக்கு இறக்கிய பின்னர் லாரியை கடலூர்-புதுச்சேரி சாலையோரம் நிறுத்திவிட்டு, பணம் பெற கடைக்குள் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சக்கரவர்த்தி, இது குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் தன்வந்திரி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, கடலூர் சாவடியில் உள்ள ஒரு பட்டறையில் லாரியை கண்டுபிடித்தனர். அங்கு லாரி டயரை கழற்றிக்கொண்டிருந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பாகூர் புதிய காமராஜர் நகரைச் சேர்ந்த சூடாமணி மகன் குமரகுரு (எ) குரு (30) என்பது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் புதுச்சேரி உருளையன்பேட்டை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த ஆல்பர்ட் மகன் அலாதீன் (26), கடுவனூர் மாரியம்மன் கோயில் தெரு கலியமூர்த்தி என்பவரின் மகன் நிர்மல்ராஜ் (எ) விமல்(33) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிர்மல்ராஜ் லாரி வைத்துள்ளார். அதற்கு டயர் வேண்டும் என்று குமரகுருவிடம் தெரிவித்துள்ளார். அப்போது கிருமாம்பாக்கம் பிரதான சாலையில் லாரி நின்றிருப்பதை பார்த்த 3 பேரும் லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.
செலியமேடு அருகே மறைவான இடத்தில் லாரியின் பதிவெண்ணை சுரண்டி எடுத்துள்ளனர்.
பின்னர், நிர்மல்ராஜ் கடலூர் சாவடியில் உள்ள பட்டறையில் லாரியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். அலாதீன், குமரகுரு ஆகியோர் லாரி டயரை கழற்றிக்கொண்டிருந்த போது போலீஸார் வந்தனர். போலீஸாரை கண்ட அலாதீன் தப்பியோடிவிட்டார். குமரகுரு மாட்டிக்கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான லாரி, 2 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.