விழுப்புரம் அருகே கிணற்றில் விஷ வாயு தாக்கி இருவர் சாவு
விழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கி, மின் மோட்டார் பழுதை சரிசெய்து கொண்டிருந்த எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட இருவர் விஷ வாயு தாக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
விழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கி, மின் மோட்டார் பழுதை சரிசெய்து கொண்டிருந்த எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட இருவர் விஷ வாயு தாக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
விழுப்புரம் அருகே நன்னாடு, ஆலாத்தூரைச் சேர்ந்தவர் ராஜாராம் (50), விவசாயி. அப்பகுதியில் இவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் 50 அடி ஆழ கிணறு உள்ளது.
சில மாதங்களாக வறண்டுக் கிடந்த இந்த கிணற்றில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் சுரக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதிய ராஜாராம், விவசாயம் செய்ய திட்டமிட்டார்.
இதற்காக, அவர் சனிக்கிழமை கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை இயக்கிப் பார்த்தபோது, அது பழுதாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மின் மோட்டாரை சரி செய்ய, ராஜாராம் அதே ஊரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் பன்னீர்செல்வம் (35) என்பவரை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கிணற்றுப் பகுதிக்குச் சென்றார். பின்னர், இருவரும் கிணற்றுக்குள் இறங்கி மின் மோட்டார் பழுதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, தண்ணீரின்றி வறண்டு இருந்த, அந்த குறுகலானக் கிணற்றில் பிராண வாயு (ஆக்ஸிஜன்) இல்லாத நிலையில், அங்கு சூழ்ந்திருந்த பிற விஷ வாயுக்கள் தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர்.
இதற்கிடையே, வெகு நேரமாகியும் ராஜாராமும், பன்னீர் செல்வமும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றனர். அப்போது, இருவரும் விஷ வாயு தாக்கி கிணற்றுக்குள் மயங்கிக் கிடந்தது தெரிய வந்தது. உடனே, ஊர் மக்கள் உதவியுடன் அவர்கள் இருவரும் கயிறு கட்டி மீட்கப்பட்டு, 108 அவசர ஊர்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நேரில் சென்று, கிணற்றை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.