பால் வியாபாரியைத் தாக்கிய இளைஞர் கைது
புதுவை மாநிலம், பாகூரில் பால் வியாபாரியைத் தாக்கிய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுவை மாநிலம், பாகூரில் பால் வியாபாரியைத் தாக்கிய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பாகூர் குருவிநத்தம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் மணி (30). பால் வியாபாரி. சனிக்கிழமை இரவு பால் வியாபாரத்தை முடித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் குருவிநத்தம் தூக்குப்பாலம் வழியாக வீட்டுக்குச் சென்றார்.
அப்போது அந்த வழியாக வேகமாகச் சென்ற காரிலிருந்து இறங்கியவர்கள், மணியிடம் ஏன் வேகமாகச் செல்கிறாய் எனக் கேட்டு தகராறு செய்தனர்.
தொடர்ந்து, காரில் வந்த குருவிநத்தம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த நடராஜ் (24), அவரது நண்பர் ரஞ்சித் (23) இருவரும் மணியை திட்டி கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அரிவாளால் அவரை வெட்ட முயன்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மணி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து நடராஜை கைது செய்தனர். ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.