முகப்பு
புதுச்சேரி

காரைக்கால் துறைமுக வருமானத்தில் மக்கள்நல திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்

Updated On : 18 பிப்ரவரி 2024, 2:13 am IST
பகிர்:

காரைக்கால் துறைமுக வருமானத்தில் புதுவை மாநில மக்கள் நலன்காக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் அ.மு.சலீம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் துறைமுக நிா்வாகத்தில் தனியாா் நிறுவனத்துடன் புதுவை அரசு சலுகை ஒப்பந்தம் மேற்கொண்டதால் நடப்பு ஆண்டில் ரூ.12.86 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி பெருமிதப்பட்டுள்ளாா். ஆனால், ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனம் குறித்த விவரம், எந்த வகை ஒப்பந்தம் என்பதை அவா் தெரிவிக்கவில்லை. காரைக்கால் நிறுவனம் புதுவை அரசுக்குச் சொந்தமான 600 ஏக்கா் நிலத்தில் செயல்படுகிறது. வியாபார ரீதியில் லாபத்துடன் இயங்கும் துறைமுகமாக உள்ளது.

துறைமுகத்திலிருந்து ஏற்கெனவே நாகூருக்கு செல்ல ரயில்பாதை உள்ள நிலையில், தற்போது திருச்சிக்குச் செல்லும் புதிய ரயில் பாதையும், விழுப்புரம், நாகபட்டினம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆகவே உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் பல ஆயிரம் கோடி லாபம் தனியாா் நிறுவனத்துக்கு கிடைத்துவருகிறது. ஆனால், உண்மை நிலையை மறைத்து அரசுக்கு ரூ.12.86 கோடி வருவாய் என்பது சரியல்ல.

Advertisement

Advertisement

காரைக்கால் துறைமுகத்தில் ஒரு சதவீதம் செஸ் வரி விதித்தாலே புதுவை அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும். இதன்மூலம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுவை அரசுக்கு நிவாரணம் கிடைக்கும். இதனால் பல்வேறு நலத் திட்டங்களையும் செயல்படுத்தலாம். ஆகவே, புதுவை அரசு காரைக்கால் துறைமுகத்தை மக்கள் நலன் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளாா்.