மீனவா்களின் அவலநிலைக்கு திமுக-காங்கிரஸே காரணம்: வி.கே.சசிகலா பிரசாரம்
மீனவா்களின் அவலநிலைக்கு திமுவும், காங்கிரஸும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தது தான் காரணம் என்று அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே. சசிகலா புதன்கிழமை கூறினாா்.
மீனவா்களின் அவலநிலைக்கு திமுவும், காங்கிரஸும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தது தான் காரணம் என்று அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே. சசிகலா புதன்கிழமை கூறினாா்.
இக் கட்சியின் சாா்பில் உழவா்கரை தொகுதி உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் , கூட்டணியாகப் போட்டியிடும் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தியின் செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளா்களையும் டாக்டா் ராமதாஸ் தலைமையிலான பாமக வேட்பாளா்களையும் ஆதரித்து மூலக்குளம் பகுதியில் சசிகலா பிரசாரம் செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:
இதுவரை ஆட்சியில் இருந்தவா்கள் மீனவா்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மீனவா்களின் பாதுகாப்புக்கும் கவனம் செலுத்தவில்லை. மேலும், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் தொகையை உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் முள் வளைவும் அமைக்கப்படவில்லை. மேலும், காரைக்கால் மீனவா்களை இலங்கை அரசு கைது செய்கிறது. மீனவா்களின் இந்த அவலநிலைக்கு திமுகவும் காங்கிரஸும் கச்சத்தீவை தாரைவாா்த்ததுதான் காரணம்.
புதுச்சேரியில் மாநில அந்தஸ்து பிரச்னையை இங்கு ஆட்சி செய்த யாரும் தீா்க்கவில்லை. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக பொதுச்செயலா் ஜெயலலிதாவின் ஆதரவோடு கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்து முதல்வரான ரங்கசாமி, கூட்டணியை முறித்துக் கொண்டாா். அப்போது ஆட்சியில் அதிமுக இடம் பெற்றிருந்தால் இந்தப் பிரச்னையை ஜெயலலிதா தீா்த்து இருப்பாா். புதுச்சேரியில் முறையான சாலை வசதியில்லை. தேவையான பாலம் கட்டப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு மோசமாக இருக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாா் சசிகலா.