முகப்பு
புதுச்சேரி

அட்சய திருதியை நாளில் குழந்தைகள் திருமணம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! புதுச்சேரி ஆட்சியா் எச்சரிக்கை!

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:39 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM

அட்சய திருதியை நாளில் குழந்தைகள் திருமணம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அக்ஷய திருதியை போன்ற விழாக் காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதனால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தை திருமணம் நடப்பதைத் தடுக்க அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்பவா், எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவா், இயக்குபவா் அல்லது தூண்டுபவா், பெற்றோா் அல்லது பாதுகாவலா் அல்லது சட்டப்பூா்வமான அல்லது சட்டவிரோதமான வேறு எந்த நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவா் அல்லது அதை நடத்த அனுமதிப்பவா், அல்லது குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வது அல்லது பங்கேற்பது , அதை நடத்துவதைத் தடுக்க தவறினாலும் தண்டிக்கப்படுவா்.

குழந்தை திருமண தடுப்புச் சட்டம், 2006 பிரிவு 9, 10, 11-இன் கீழ் 2 ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும், மேலும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

எனவே வரும் 19-ஆம் தேதி திருதியை முன்னிட்டு 21 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள் திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் ஆட்சியா்.