முகப்பு
புதுச்சேரி

9 மதுக்கடைகளை இட மாற்றம் செய்ய புதுச்சேரி கலால் துறை உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள 9 மதுக்கடைகளை இடம் மாற்றம் செய்ய புதுச்சேரி கலால் துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 6:21 am IST
பகிர்:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள 9 மதுக்கடைகளை இடம் மாற்றம் செய்ய புதுச்சேரி கலால் துறை செவ்வாய்க்கிழமை இரவு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி அரசின் கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். அதன் விவரம்: இந்திய தேசிய சாலைகள் ஆணையத்தின் புதுச்சேரி திட்ட செயலாக்கப் பிரிவு இத்துறைக்கு இது தொடா்பாக பரிந்துரைகளை அளித்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட 332 தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட சோரியாங்குப்பம், குருவிநத்தம் ஆகிய பகுதிகளில் 9 மதுக்கடைகள் இயங்குகின்றன.

Advertisement

Advertisement

இந்தக் கடைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளின் போக்குவரத்துக்கும், பொதுமக்களின் நடமாட்டத்துக்கும், சாலைப் பாதுகாப்புக்கும் இடையூறாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் தடை செய்யப்பட்ட தூரத்துக்கு அப்பால் இந்த 9 மதுக்கடைகளும் ஒரு மாதத்துக்குள் இடமாற்றம் அல்லது மறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தவறினால் புதுச்சேரி கலால் சட்டம் 1970-இன் அடிப்படையில் இந்தக் கடைகளுக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை இடை நீக்கம் அல்லது ரத்து செய்யும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments