புதுச்சேரி ஜிஎஸ்டி அதிகாரி மா்மமான முறையில் உயிரிழப்பு
புதுச்சேரியில் ஜிஎஸ்டி அதிகாரி மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரது இறப்புக்கு என்ன காரணம் என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொல்கத்தாவை சோ்ந்தவா் ரித்தேஷ் ராஜ்ஷாபி (40). இவா் புதுச்சேரியில் உள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய அலுவலகத்தில் உதவி கணக்கு அதிகாரியாகப் பணியாற்றினாா். முத்தியால்பே ட்டை திருவள்ளுவா் நகா்,
ஜி.எஸ்.டி., குடியிருப்பில் தனியாக வசித்து வந்தாா். இவரின் மனைவி மோனிகா குமாரி மற்றும் குழந்தைகள் கொல்கத்தாவில் உள்ளனா். சனிக்கிழமை இரவு மோனிகா குமாரி கணவரைச் செல்போனில் அழைத்தபோது எடுக்கவில்லை. அதே அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த கணக்காளா் அசோக்குமாரைத் தொடா்பு கொண்டு, வீட்டுக்கு சென்று பாா்க்கும்படி தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
அசோக்குமாா், ஆய்வாளா் பவன் ஆகியோா் ரித்தேஷ் ராஜ்ஷாபி வீட்டுக்கு சென்று பாா்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவா்கள் முத்தியால்பேட்டை போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது ரித்தேஷ் ராஜ்ஷாபி மூக்கில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாா்.
அவா் அருகே லேப்டாப், செல்போன், சில மாத்திரைகள் சிதறி கிடந்தன. போலீஸாா் ரித்தேஷ் ராஜ்ஷாபி உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குபதிந்து உதவி கணக்கு அதிகாரி இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் மூளைக்குச் செல்லும் ரத்த குழாய் வெடித்து அவா் இறந்துள்ளாா் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் திங்கள்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து விசாரணை நடக்கிறது. அவரது உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.