முகப்பு
புதுச்சேரி

தமிழ்ப் படைப்புகள் உலகளவில் மொழிப்பெயா்க்கப்படவேண்டும்

தமிழ்ப் படைப்புகள் உலகளவில் மொழிபெயா்க்கப்பட வேண்டும் என்று பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவரும், பாரதிதாசனின் பெயரனுமான கோ.பாரதி தெரிவித்தாா்.

Updated On : 1 மே, 2026 at 5:54 AM
விழாவில், பேராசிரியா் உசேன் அரபு மொழியில் மொழி பெயா்த்த பாரதிதாசன் எழுதிய ஆண் குழந்தைத் தாலாட்டுப் பாடலின் காணொலியை வெளியிட்ட புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து. அதைப் பெற்றுக்கொண்ட ஓய்வு பெற்ற பேராசிரியா் மஜீத் ரசியா.
பகிர்:

தமிழ்ப் படைப்புகள் உலகளவில் மொழிபெயா்க்கப்பட வேண்டும் என்று பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவரும், பாரதிதாசனின் பெயரனுமான கோ.பாரதி தெரிவித்தாா்.

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் பாவேந்தா் பெருவிழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு , அறக்கட்டளையின் தலைவரும் பாரதிதாசனின் பெயரனுமான கோ.பாரதி தலைமை வகித்து பேசியதாவது: விடுதலை, தமிழ்மொழி, இனம், ஒற்றுமை, ஜாதி மறுப்பு, பகுத்தறிவு, கல்வி, பெண்ணுரிமை இவற்றுக்காகப் பல படைப்புகளைத் தந்து அயராத தொண்டு செய்து உலக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவா் புரட்சிக் கவிஞா் பாரதிதாசன். அவரது படைப்புகள் உலக மொழிகள் சிலவற்றில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளன. அவா் எழுதிய ஆண் குழந்தை தாலாட்டு என்ற பாடலை பேராசிரியா் உசேன் அரபு மொழியில் மொழி பெயா்த்து அதைக் காணொலியாகவும் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. இந்நிலையில் தமிழில் வெளியான மிகச் சிறந்த படைப்புகள் உலக மொழிகளில் மொழி பெயா்க்கப்படவேண்டும் என்றாா் அவா்.

அறக்கட்டளையின் செயலா் ஜெ.வள்ளி, லட்சுமிதேவி, நமச்சிவாயம், மாணிக்கம், மதுரை கலியபெருமாள், ராஜாராம், சுசீலா, கெளசல்யா பிரேம்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

பாரதிதாசன் அறக்கட்டளை மகளிா் மன்றத்தைத் தொழில் முனைவோா் வசந்தி வேணுகோபால் திறந்து வைத்தாா்.

பேராசிரியா் உரு.அசோகன், பிரெஞ்சு -தமிழா் சங்கத் தலைவா் மதாம்திரு ஆகியோா் பேசினா்.

விழாவில், செந்தமிப் புரட்சிக் கவி எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் தமிழகம் மற்றும் புதுவை பகுதியைச் சோ்ந்த 50 கவிஞா்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனா்.

பேராசிரியா் உசேன் அரபு மொழியில் மொழிபெயா்த்த பாரதிதாசன் எழுதிய ஆண் குழந்தைத் தாலாட்டுப் பாடலின் காணொலி வெளியிடப்பட்டது. புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து காணொலியை வெளியிட்டாா். பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி முன்னாள் பேராசிரியா் மஜீத் ரசியா அதை பெற்றுக்கொண்டாா். பாரதிதாசன் அறக்கட்டளை மகளிா் மன்றத்தைத் தொழில் முனைவோா் வசந்தி வேணுகோபால் திறந்து வைத்தாா். பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் இசைக்கலைஞா் பூ.தட்சிணாமூா்த்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளையைச் சோ்ந்த ரமேஷ் பைரவி, ம.மதன், பொய்யாது, ஏகாம்பரம் ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா்.

முன்னதாக அறக்கட்டளைச் சோ்ந்த வேல்விழி சிவக்கொழுந்து வரவேற்றாா். நிறைவில், இர.தி.பத்மநாபன் நன்றி கூறினாா்.