நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!
நீட் தேர்வு நுழைவு அனுமதி அட்டையில் வினாத்தாள் மொழி என நாகர் இடம் பெற்றிருப்பது பற்றி...
தேசிய தகுதி மற்றும் நுழைவு (நீட்) தேர்வைத் தமிழில் எழுத விண்ணப்பித்த தேர்வருக்கு நாகர் மொழியில் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தி அனுமதிச் சீட்டு அனுப்பினால் எப்படியிருக்கும்?
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரும் மே 3 ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை, பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்குத் தற்காலிக அனுமதி அட்டைகள் இணையவழி அனுப்பப்பட்டுள்ளன.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டை டவுன்லோட் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரருக்கு அதிர்ச்சியொன்று காத்திருந்தது. ஏனெனில், நீட் தேர்வு விண்ணப்பத்தில் தேர்வு மொழியாக அவர் கேட்டிருந்தது – தமிழ். ஆனால், நுழைவு அட்டையில் வினாத் தாளின் மொழி என்ற இடத்தில் நாகர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Advertisement
நீட் தேர்வை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மாணவ, மாணவிகள் எழுதலாம். இந்த 13 மொழிகளின் பட்டியலில் எங்கேயும் நாகர் மொழி என்று எதுவும் இடம் பெறவில்லை.
ஆனால், நுழைவு அட்டையில் வினாத் தாளின் மொழி என்ற இடத்தில் நாகர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லாமல் இந்த நுழைவு அனுமதி அட்டையில் வேறு சில நகைச்சுவைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
தேர்வு எழுதுபவரின் - மாணவ, மாணவி பெயர் இடம் பெறும் இடத்தில் கேன்டிடேட் நேம் (Candidate Name) என்பதற்குத் தமிழில் தேர்வர் என்பதற்குப் பதிலாக (தேர்தல் நேரம் என்பதாலோ என்னவோ?) வேட்பாளரின் பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது; பரவாயில்லை.
பாலினம் என்ற இடத்தில் ஆண் அல்லது பெண் என்று இருப்பதற்குப் பதிலாக திருமணம் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண், திருநர், திருநங்கை உண்டு, இது ஏதோ புது இனம்!
எக்ஸாமினேஷன் டீடெய்ல்ஸ் (Examination Details) என்பதைத் தேர்வு விவரங்கள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சோதனை விவரங்கள் என்று 'மொழிபெயர்த்திருக்கிறார்கள்'.
மொழிபெயர்ப்புப் பிரச்சினைகளை ஏதோ தமிழுக்கு வந்த சோதனை என்று எவ்வாறேனும் சமாளித்துக் கொள்வதாக இருந்தாலும் நாகர் மொழியில் தேர்வை வேட்பாளர் எழுதுவது எப்படி?
நமக்குக் கிடைத்துள்ள நுழைவு அனுமதி அட்டையொன்றின் பிரதியில் நாகர் மொழி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்விஷயம் யாரை அணுகி, எவ்வாறு திருத்தப் பெறுவது என்பது விண்ணப்பதாரருக்குத் தெரியவில்லை.
ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் எவ்வளவு மாணவ, மாணவியருக்கான நுழைவு அட்டையில் இவ்வாறு நாகர் மொழி குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. வேறு ஏதேனும் புதிய மொழிகளும் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆபத்து இருக்கிறதா?
மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த நுழைவுத் தேர்வை நடத்தும் முகமைகள் விரைவில் விளக்கம் தெரிவித்து தேர்வு எழுதுவதற்கான மொழிகள் பற்றி அறிவித்தால் நல்லதென மாணவ, மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.