நீட் தேர்வு! முதல்வர் தெளிவாக இருக்கிறார்! - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் தெளிவாக இருப்பதாக அமைச்சர் பேட்டி...
நீட் தேர்வு விவகாரத்தில் கொள்கை முடிவில் முதல்வர் ஜோசப் விஜய் தெளிவாக இருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, நீட் தேர்வு, மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவரிடம் எழுப்பப்பட்ட கோவை மெட்ரோ ரயில் நிராகரிப்பு தொடர்பான கேள்விக்கு, முதல்வரைப் பொறுத்தவரை கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ உருவாகப்பட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. இது குறித்து பிரதமரிடமும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Advertisement
Advertisement
மேலும், அதிமுகவில் இருந்த நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலகியது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலகியதற்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் நேரடியாக விசாரணை மேற்கொள்வதற்காக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது, சட்டப்பேரவை தலைவர் அதற்கான முடிவுகளை எடுப்பார் என்று கூறினார்.
நீட் தேர்வு போராட்டம் தொடர்பான கேள்விக்கு, ”அது ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உணர்வுகள். நீட் தேர்வு பொருத்தவரை எங்கள் கட்சியின் கொள்கை முடிவில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஆட்சியை சரியான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த உணர்வுகளை பிரதமரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பாக உள்ளது என்பதையும் பிரதமரிடம் தெரிவித்திருக்கிறார்” என்றார்.
நாமக்கல் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தியது தொடர்பான கேள்விக்கு, ”ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு குறைபாடுகள் இருக்கும். நம்முடைய லஞ்ச ஒழிப்புத்துறை, அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் என்ன நடைபெறுகிறது என்பதை மாவட்ட வாரியாக ஒரே நேரத்தில் ஒரு துறையை ஆய்வு செய்வது அவர்களது வழக்கம். அதனை அவர்கள் செய்து வருகிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களது குறைகளை அந்த துறையின் செயலாளரிடம் கூறியிருக்க வேண்டும்” என்றார்.
மேக்கேதாட்டு விவகாரத்தில் தவெக நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கு, ”மேக்கேதாட்டு அணையை பொருத்தவரை ஒரு செங்கலைகூட அவர்கள் எடுத்து வைக்கக் கூடாது. அதனை அனுமதிக்க மாட்டேன் என்பது கொள்கை முடிவு” என்றார்.
தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு, பட்ஜெட் என்பது சீக்ரெட். பட்ஜெட்க்கு பிறகு கேள்வி கேளுங்கள் என்றார்.
Chief Minister is clear in NEET Exam issue - Minister Sengottaiyan's statement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.