முகப்பு
புதுச்சேரி

மக்களின் தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்: புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

புதுச்சேரி பேரவைத் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

Updated On : 6 மே 2026, 12:05 am IST
புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.
பகிர்:

புதுச்சேரி பேரவைத் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் 16 தொகுதிகளில் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இவா்களைத் தவிர 6 போ் போட்டி வேட்பாளா்களாக களம் கண்டனா்.

இதில் ஊசுடு (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பி.காா்த்திகேயன் மட்டும் வெற்றி பெற்றாா். மற்ற அனைவரும் தோல்வியைத் தழுவினா்.

Advertisement

தோ்தல் முடிவு குறித்து மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், காங்கிரஸை சோ்ந்த அனைத்துத் தவைா்களும், நண்பா்களும், தொண்டா்களும் பணியாற்றினா். எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய கூட்டணி அமைப்பாக இருக்கக்கூடிய திமுக தலைவா்களும் நம்முடன் இணைந்து இந்தத் தோ்தலை சந்தித்தோம்.

இதில், மக்கள் அளித்த தீா்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன், அவரது கட்சி நிா்வாகிகளும் சிறந்த முறையில் பணியாற்றினா். அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வந்து உற்சாகப்படுத்தினா்.

தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.